கடந்த மே 18 ஆம் தேதி பேரா ஸ்ரீ மஞ்சோங் மருத்துவமனைக்கு வெளியே ஓர் அரசியல் கட்சியுடன் இணைந்து தொழிற்சங்கம் என்று கூறிக்கொண்ட ஓர் அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கும், ஸ்ரீ மஞ்சோங் மருத்துவமனை நிர்வாகத்திற்கும் எவ்வித நேரடித் தொடர்பும் இல்லை என்று பேரா மாநில மனிதவள மற்றும் சுகாதாரக் குழுவின் தலைவர் டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
இன்று ஸ்ரீ மஞ்சோங் மருத்துவமனையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய டத்தோ சிவநேசன், பாதிக்கப்பட்ட துப்புரவுப் பணியாளர் மருத்துவமனையின் நேரடித் தொழிலாளி அல்ல என்றும், அவர் ஒரு தனியார் ஒப்பந்த நிறுவனத்தின் கீழ் பணிபுரிபவர் என்றும் விளக்கமளித்தார்.
"மருத்துவமனை இந்தத் தொழிலாளர்களின் முதலாளி கிடையாது. அவர்களுக்குள் ஏதேனும் தொழிற்துறைப் பிரச்சினைகள் அல்லது கருத்து வேறுபாடுகள் இருந்தால், அதை அவர்கள் சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனத்துடன்தான் பேசி தீர்த்துக் கொள்ள வேண்டும். தொழிலாளர் சங்கம் போராட்டம் நடத்த விரும்பியிருந்தால் கூட, அதனை அந்தத் தனியார் நிறுவனத்தின் தலைமையகத்திற்கு முன்னால் நடத்தியிருக்க வேண்டுமே தவிர, பொதுமக்களுக்குச் சேவை செய்யும் மருத்துவமனைக்கு முன்னால் நடத்தியிருக்கக் கூடாது" என்று டத்தோ அ. சிவநேசன் சுட்டிக்காட்டினார்.
கடந்த மார்ச் 27, ஆம் தேதி மேற்பார்வையாளரால் துப்புரவுப் பணியாளர் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் குறித்து டத்தோ அ. சிவநேசன் சில முக்கிய விபரங்களைப் பகிர்ந்துகொண்டார்.
பாதிக்கப்பட்ட பணியாளர் இது குறித்து ஏற்கனவே காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். முதற்கட்ட போலீஸ் விசாரணையில் இதில் குற்றவியல் கூறுகள் ஏதும் இல்லை எனத் தெரிந்ததால், இந்த வழக்கு அடுத்தகட்ட நடவடிக்கைக்காக மனிதவளத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட தனியார் ஒப்பந்த நிறுவனம் இது தொடர்பாக ஏற்கனவே ஓர் உள் அளவிலான விசாரணையை நடத்தி, அதன் முடிவுகளைப் போராட்டத்திற்கு முன்பாகவே தொழிற்சங்கத்திடம் ம் தெரிவித்துவிட்டது எனபைதையும் டத்தோ சிவநேசன் விளக்கிானர்.
இந்தச் செய்தியாளர் சந்திப்பின் போது, மாநில மருத்துவத் துறை துணை இயக்குநர் டாக்டர் முகமது நஜிப் அட்னான் மற்றும் ஸ்ரீ மஞ்சோங் மருத்துவமனையின் இயக்குநர் டாக்டர் கிரிதாரி நாத் கிங்கையா ஆகியோர் உடனிருந்தனர்.












