'காளான்' சுவை கொண்ட வேப் புகைபிடிக்கும் திரவம் தொடர்பான தகராறில், 30 வயது நபரைக் குத்திக் கொன்றதாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று சகோதரர்கள் மீது இன்று மலாக்கா, ஜாசின் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் கொலைக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
கடந்த மே 13-ஆம் தேதி, மலாக்கா, மெர்லிமாவ், தாமான் முஹிப்பாவிலுள்ள விளையாட்டு மைதானம் அருகே ரிச்சர்ட் எட்வர்ட் என்பவரைக் கொலை செய்ததாக 20 வயது ஆர். முருகா, 27 வயது ஆர். அருணாசலம் மற்றும் 28 வயது ஆர். மகேந்திரன் ஆகியோர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. தமிழிலில் வாசித்துக் காட்டப்பட்ட குற்றச்சாட்டை அந்த மூன்று சகோதரர்களும் புரிந்து கொண்டதாக நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
இவ்வழக்கு விசாரணை உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்படுவதால் மூவரிடமும் எந்தவொரு வாக்குமூலமும் பதிவு செய்யப்படவில்லை. குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் மரணத் தண்டனை அல்லது 40 ஆண்டுகள் வரை சிறை மற்றும் பிரம்படித் தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 302 பிரிவின் கீழ் மூன்று சகோதர்களும் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளனர்.








