May 26, 2026
Thisaigal NewsYouTube
மலாக்கா துரியான் துங்கல் துப்பாக்கிச்சூடு: விசாரணை அறிக்கை 4-ஆவது முறையாக சட்டத்துறை அலுவலகத்திடம்  ஒப்படைப்பு
தற்போதைய செய்திகள்

மலாக்கா துரியான் துங்கல் துப்பாக்கிச்சூடு: விசாரணை அறிக்கை 4-ஆவது முறையாக சட்டத்துறை அலுவலகத்திடம் ஒப்படைப்பு

Share:

மலாக்கா டுரியான் துங்கலில் மூன்று இந்திய இளைஞர்கள் போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில் கூடுதல் விவரங்களுடன் பூர்த்தி செய்யப்பட்ட விசாரணை அறிக்கை, நேற்று 4-ஆவது முறையாக சட்டத்துறை தலைவரின் அலுவலகத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என்று புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் குற்றப்புலனாய்வுத்துறை சி.ஐ.டி. இயக்குநர் டத்தோ எம். குமார் தெரிவித்தார்.

இன்று காஜாங் மாவட்ட போலீஸ் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் நிருபர்களின் கேள்விக்கு பதில் அளிக்கையில் டத்தோ குமார் இவ்விவரத்தை வெளியிட்டார்.

கடந்த ஆண்டு நவம்பர் 24-ஆம் தேதி அதிகாலை நடந்த துப்பாக்கிச்சூட்டில், 21 வயது எம். புஸ்பநாதன், 24 வயது டி. பு வனேஸ்வரன் மற்றும் 29 வயது ஜி. லோகேஸ்வரன் ஆகிய மூன்று இளைஞர்கள் உயிரிழந்தனர். போலீஸ் அதிகாரி ஒருவரைப் பாராங் கத்தியால் வெட்ட முயன்றபோது, தற்காப்பிற்காக இத்துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டது.

பெரிய அளவில் விவாதத்தை ஏற்படுத்திய இச்சம்பவம் குறித்து இதுவரை 63 சாட்சிகளிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாக டத்தோ குமார் குறிப்பிட்டார்.

உண்மைகளைத் தெளிவுபடுத்தும் நோக்கில் சில சாட்சிகளிடம் கூடுதல் விசாரணை நடத்தப்பட்ட பிறகு, இந்த அறிக்கை மீண்டும் AGC-இன் அடுத்தகட்ட வழிகாட்டுதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது. இக்கொலை வழக்கு குற்றவியல் சட்டத்தின் 302-ஆவது பிரிவின் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது என்பதையும் அவர் விளக்கினார்.

Related News