தைப்பிங் சிறைச்சாலையில் கைதிகள் மீதான அத்துமீறல்கள் குறித்த மனித உரிமை ஆணையமான சுஹாகம் அறிக்கை, அதிர்ச்சியளிப்பதாக இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ தெரிவித்துள்ளார்.
கைவிலங்கிடப்பட்ட கைதிகள் மீது மிதமிஞ்சிய வன்முறை, மிளகாய்த்தூள் தெளிப்பு மற்றும் மருத்துவப் பதிவுகளை போலியாக தயாரித்தது போன்ற காரணங்களால் ‘கான் சின் எங்’ என்ற கைதி மரணமடைந்ததுடன், 100-க்கும் மேற்பட்ட கைதிகள் காயமடைந்துள்ளனர் என சுஹாகாம் அறிக்கை கூறுகிறது.
2025 ஆம் ஆண்டு ஜனவரியில் நடந்த இச்சம்பவம் குறித்து போலீஸ் துறை எத்தனை புகார்களைப் பதிவு செய்துள்ளது, சம்பந்தப்பட்டவர்கள் மீது என்ன குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதை ஐஜிபி வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என கோபிந்த் சிங் வலியுறுத்தினார்.
மேலும், கைதியின் மரணத்திற்கு காரணமான அதிகாரி மீது கடுமையான சட்டப்பிரிவுகளின் கீழ் ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என சட்டத்துறை தலைவரும் விளக்கமளிக்க வேண்டும் என்று கோபிந்த் சிங் கேட்டுக்கொண்டார்.
சிறைச்சாலைகள் சட்டத்திற்கு அப்பாற்பட்டவை அல்ல என்றும், கைதிகளுக்கும் மனித உரிமைகள் உண்டு என்றும் குறிப்பிட்ட அவர், இச்சம்பவம் குறித்து அடுத்த வாரம் நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் பேசவிருப்பதாக கோபிந்த் சிங் உறுதியளித்தார்.








