பகாங் மாநிலம் பாண்டாய் பலோக் பகுதியில் நண்பர்களுடன் சிப்பி சேகரிக்கச் சென்ற 16 வயது மாணவர் நீரில் மூழ்கியிருக்கலாம் என அச்சம் எழுந்துள்ளது.
மாலை 6.02 மணியளவில், இச்சம்பவம் குறித்த அவசர அழைப்பு பெறப்பட்டதாக பகாங் மாநில தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவின் உதவி செயல்பாட்டு இயக்குநர் முகமது சாலாவுதீன் ஈசா தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, குவாந்தான் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தைச் சேர்ந்த வீரர்கள், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, பொதுமக்களின் உதவியுடன் கடற்கரைப் பகுதியில் தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
என்றாலும், தற்போது வரை மாயமான மாணவர் கண்டுபிடிக்கப்படாத நிலையில், தொடர்ந்து தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதனிடையே, பகாங் மாநில கல்வி இலாகா வெளியிட்டுள்ள அறிக்கையில், பள்ளிக்குத் தெரியாமல் மாணவர்கள் சிலர் விடுதியிலிருந்து வெளியேறி கடற்கரைப் பகுதியில் விளையாடச் சென்றதாகக் குறிப்பிட்டுள்ளது.
காணாமல் போன மாணவருக்காக பிராத்தனை செய்வதாகவும் தெரிவித்துள்ளது.








