ஸ்ரீ கெம்பாங்கான், நவ. 18-
நாட்டின் முன்னண சங்கிலி தொடர்பு வர்த்தக நிறுவனமான KK Super Mart ஆதரவுடன் KK GOJU-KAI சிலாங்கூர் கராத்தே போட்டி 2024, கடந்த சனிக்கிழமையும், ஞாயிற்றுக்கிழமையும் வெகுசிறப்பாக நடைபெற்றது.
சிலாங்கூர், ஸ்ரீ கெம்பாங்கான், சவுத் சிட்டி பிளாசாவில் நடைபெற்ற இந்த இரண்டு நாள் கராத்தே போட்டியில் மொத்தம் 430 பேர் பங்கேற்றனர். வெட்ரன் வீரர்கள் உட்பட 14 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஒரு பிரிவும், 6 க்கும் 13 வயதுக்கும் இடைப்பட்ட வயதுடைய சிறார்களுக்கு ஒரு பிரிவும், இரண்டு பிரிவுகளாக நடைபெற்ற இந்த கராத்தே போட்டியில் மாணவர்களின் பெற்றோர்களும், பொது மக்களும் திளராக கலந்த கொண்டு போட்டியை கண்டு களித்தனர்.

KK KK GOJU-KAI சிலாங்கூர் கராத்தே போட்டியின் நிறைவு விழாவில் ஆதரவு நிறுவனமான KK Supermart தோற்றுநரும், தலைவருமான டத்தோஸ்ரீ டாக்டர் கே.கே. சாய் Chai கலந்து சிறப்பித்தார்.
இந்த இரண்டு நாள் போட்டியில் இந்திய, சீன மற்றும் முஸ்லிம் மாணவகள் திரளாக கலந்து கொண்டது, போட்டி விளையாட்டுக்கு சிறப்பு சேர்ப்பதாக உள்ளது என்று சிலாங்கூர் Do Goju Kai கராத்தே சங்கத்தின் ஆலோசகருமான டத்தோஸ்ரீ டாக்டர் கே.கே. சாய் குறிப்பிட்டார்.
கராத்தே மூலம் இளையோர்களின் திறமைகளை வளரப்பதற்கும், கட்டொழுங்கிற்கான ஒரு தளமாக மாற்றுவதற்கும் இப்போட்டி விளையாட்டின் மூலம் சிலாங்கூர் Do Goju Kai கராத்தே சங்கம், கடந்த 13 ஆண்டு காலமாக மேற்கொண்டு வரும் முயற்சி பாராட்டத்தக்கதாகும் என்று புகழாரம் சூட்டினார்.

விளையாட்டு என்பது சிறார்களுக்கு மட்டுமல்ல. அனைவருக்கும் உரியது. சிறார்கள்தான் சமுதாயத்தின் எதிர்காலம், நாட்டின் எதிர்காலம்.இம்முறை நடைபெற்ற போட்டியில் 27 கிளப்புகளிலிருந்து 40 க்கும் அதிகமான குழுக்களுடன் 430 பேர் பங்கு கொண்டு இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இதில் இந்தியாவிலிருந்து இரண்டு குழுவினரும் பங்கு கொண்டு இருப்பது, இந்த கராத்தே போட்டிக்கு அனைத்துலக அளவில் ஆதரவு கிடைத்து வருவதை காட்டுகிறது என்று டத்தோஸ்ரீ டாக்டர் கே.கே. சாய் புகழாரம் சூட்டினார்.
இப்போட்டியில் கலந்து கொண்டு தங்கள் திறமையை வெளிப்படுத்திய அனைத்து பங்கேற்பாளர்களுக்கும் ஆதரவு நிறுவனம் என்ற முறையில் தமது பாராட்டுக்களையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொண்டதுடன் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளையும், சான்றிதழ்களையும் டத்தோஸ்ரீ டாக்டர் கே.கே. சாய் வழங்கி சிறப்பித்தார்.

முன்னதாக, சிலாங்கூர் Do Goju Kai கராத்தே சங்கத்தின் தலைவர் மாஸ்டர் ஜே. சிதம்பரம், நிகழ்விற்கு சிறப்பு வருகை புரிந்த டத்தோஸ்ரீ டாக்டர் கே.கே. சாய்க்கு பொன்னாடை போர்த்தி, மாலை அணிவித்து சிறப்பு செய்தார்.
பள்ளி தேர்வின் காரணமாக அதிகமான மாணவர்கள் கலந்து கொள்ள இயலவில்லை என்றாலும் அடுத்த ஆண்டு அதிகமான மாணவர்களுடன் அனைத்துலக அளவிலான ஒரு போட்டி விழாவாக தாய்லாந்து, பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா ஹாங் காங் போன்ற நாடுகளிலிருந்து அதிகமாக பங்கேற்பாளர்கள் கலந்து கொள்வதற்குரிய ஏற்பாடு செய்யப்படும் என்று இந்த கராத்தே போட்டி விளையாட்டின் ஒருங்கிணைப்பாளரான பிரபாகரன் சிதம்பரம் தெரிவித்தார்.

அதேவேளையில் போட்டிக்கு கடந்த 13 ஆண்டு காலமாக ஆதரவு நல்கி வரும் டத்தோஸ்ரீ டாக்டர் கே.கே. சாய்க்கு தமது நன்றியை தெரிவித்துக்கொள்வதாக பிரபாகரன் குறிப்பிட்டார்.
இவ்விழாவில் மலேசியா – சீனா நட்புறவு, பரஸ்பர உதவி சங்கத்தின் ஆலோசகர் டத்தோஸ்ரீ மைக்கல் சோங், KK Supermart நிறுவனத்தின் இயக்குநரும், நிறுவன வணிகத் தொடர்பு ஆலோசகருமான முகமட் ஹைகால் டேனியல் ஆகியோர் சிறப்பு வருகைப் புரிந்தனர்.








