பிகேஆர் கட்சி ஆட்சியைப் பிடித்து, அதன் தலைவர் டத்தோஸ்ரீ இப்ராஹிம் பிரதமராகப் பொறுப்பேற்றிருந்தாலும், கட்சியினர் மெத்தனமாகவோ அல்லது கடந்த கால வெற்றிகளில் மூழ்கியோ விடக்கூடாது என அதன் பொதுச்செயலாளர் டத்தோ டாக்டர் ஃபூசியா சாலே அறிவுறுத்தியுள்ளார்.
PRM எனப்படும் மலேசிய மக்கள் கட்சியுடன் இணைந்து பிகேஆர் கட்சியாக உருவெடுத்ததன் வரலாற்றுச் சிறப்புமிக்க 23-ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு டத்தோ டாக்டர் ஃபூசியா சாலே, இன்று தனது முகநூல் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், 2004 பொதுத்தேர்தலில் ஒரே ஒரு நாடாளுமன்றத் தொகுதியை மட்டும் வென்று, கட்சி அழியும் என்று கணிக்கப்பட்ட சவாலான காலக்கட்டத்தை அவர் நினைவு கூர்ந்துள்ளார்.
கடந்த காலத் தோல்விகளும் அவதூறுகளும் தங்களைப் பலப்படுத்தியதாகக் குறிப்பிட்ட அவர், கொள்கைப்பிடிப்பான ஒரு சிறந்த மலேசியாவை உருவாக்குவதற்கான பிகேஆரின் சீர்திருத்தப் போராட்டம் இன்னும் நிறைவடையவில்லை என்றும், இலக்கை நோக்கித் தொடர்ந்து பயணிக்க வேண்டும் என்றும் தொண்டர்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்








