மன்னிப்பு வாரியங்களால் ஏற்கனவே மரண தண்டனையிலிருந்து ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்ட 25 கைதிகள், தங்களது சிறைத்தண்டனைக் காலத்தை மீண்டும் மறுஆய்வு செய்ய அனுமதிக்குமாறு கூட்டரசு நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளனர்.
கடந்த ஆண்டு நவம்பரில், மன்னிப்பு வாரியங்களால் தண்டனை குறைக்கப்பட்ட கைதிகளின் மனுக்களை மறுஆய்வு செய்ய நீதிமன்றத்திற்கு அதிகார வரம்பு இல்லை என ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு தீர்ப்பளித்திருந்தது. அந்த முந்தைய தீர்ப்பை மாற்றி அமைக்குமாறு கைதிகள் தரப்பு வழக்கறிஞர் அப்துல் ரஷித் இஸ்மாயில், சபா மற்றும் சரவாக் தலைமை நீதிபதி அஜிஸா நவாவி தலைமையிலான மூவர் அடங்கிய நீதிபதிகள் குழுவிடம் இன்று வாதிட்டார்.
தற்போதைய நடைமுறைப்படி, மன்னிப்பு கிடைக்காத கைதிகள் 2023-ஆம் ஆண்டு சட்டத் திருத்தத்தின் கீழ் நீதிமன்ற மறுஆய்வை நாட முடிகிறது; ஆனால், கருணை காட்டப்பட்ட கைதிகளுக்கு அந்த உரிமை மறுக்கப்பட்டு, அவர்கள் அதிக ஆண்டுகள் சிறையில் இருக்க வேண்டியுள்ளதாக அவர் சுட்டிக் காட்டினார்.
இந்த மனுக்களை எதிர்த்து வாதிட்ட அரசு தரப்பு வழக்கறிஞர் யுசைனி ஆமிர், கடந்த ஆண்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பையே பின்பற்ற வேண்டும் என வலியுறுத்தினார். இந்த 25 மனுதாரர்களில் 22 பேர் போதைப்பொருள் கடத்தல் வழக்கிலும், 3 பேர் கொலை வழக்கிலும் தண்டனை பெற்றவர்கள் ஆவர். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம், தனது தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்துள்ளது.








