கிள்ளான், Taman Teluk Gedung Indah பகுதியில், கடந்த வாரம் கிள்ளான் மாநகர மன்ற அமலாக்கப் பணியாளர்களின் சோதனையின் போது 'ராக்கி' (Rocky) என்ற தெருநாய் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்ந்து பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்துப் பேசிய சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி, பொதுமக்களின் புகார்களின் அடிப்படையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டாலும், அமலாக்கப் பணிகள் எப்போதும் இரக்கத்தோடும் சமநிலையோடும் நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். விலங்கு நல ஆர்வலர்களின் கவலைகளுக்கும், பொதுமக்களின் பாதுகாப்பு அச்சத்திற்கும் இடையே ஒரு சுமுகமான நடுநிலையைக் கண்டறிய வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கத்தின் முன்னுரிமை பொதுமக்களின் பாதுகாப்பைப் பேணுவதே என்றாலும், விலங்குகள் மீது கொடூரமான முறையில் அமலாக்க நடவடிக்கைகள் பாய்வதை அனுமதிக்க முடியாது என அவர் தெளிவுபடுத்தினார். மாநில அரசு பொதுமக்களின் புகார்களையும், கைவிடப்பட்ட விலங்குகளின் மேலாண்மையையும் மிகவும் தீவிரமாகக் கவனித்து வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.








