கோலாலம்பூர், ஜூன்.01-
சிலாங்கூர், தாமான் சாஹாயா அம்பாங் பகுதியிலுள்ள ஓர் அடுக்குமாடி குடியிருப்பின் 13-வது மாடியில் இருந்து கீழே விழுந்த 9 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.
சம்பவம் நிகழ்ந்த போது சிறுவன் வீட்டில் தனியாக இருந்தது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக அம்பாங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் அஸாம் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.
நேற்று மாலை சுமார் 7.45 மணியளவில், அடுக்குமாடியின் கீழே அச்சிறுவன் சுயநினைவின்றிக் கிடந்ததைக் கண்ட பெண் ஒருவர், போலீசாருக்கு தகவல் அளித்ததைத் தொடர்ந்து, அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.
இந்நிலையில், அச்சிறுவன் ஏற்கனவே இறந்து விட்டதை அம்பாங் மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவக் குழுவினர் உறுதிப்படுத்தினர்.
அதனைத் தொடர்ந்து இவ்வழக்கானது, குழந்தையைப் புறக்கணித்தல், கைவிடுதல் அல்லது துன்புறுத்தல் தொடர்பான குழந்தைகள் சட்டம் 2001-ன் பிரிவு 31(1) கீழ் விசாரணை செய்யப்பட்டு வருகின்றது.








