கோலாலம்பூர், ஜூன்.01-
நாட்டின் தேசியக் கோட்பாடான ருக்குன் நெகாராவில் கூறப்பட்டுள்ள அம்சங்களை ஏற்க மறுக்கும் எவரும் மலேசியக் குடிமக்கள் என அழைக்கத் தகுதியற்றவர்கள் என்று மாட்சிமை தங்கிய மலேசிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
தனது அதிகாரப்பூர்வ பிறந்தநாளை முன்னிட்டு இஸ்தானா நெகாராவில் இன்று நடைபெற்ற விருதளிப்பு விழாவில் உரையாற்றிய மாமன்னர், கடந்த 1970-ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 31-ஆம் தேதி, அறிமுகப்படுத்தப்பட்ட ருக்குன் நெகாரா, நாட்டின் பல்வேறு இன மக்களுக்கிடையிலான ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை மீட்டெடுத்து வலுப்படுத்தும் தேசிய உறுதிமொழி எனக் குறிப்பிட்டார்.
மலேசியாவில் வாழும் அனைவரும் ருக்குன் நெகாராவின் ஒவ்வொரு கொள்கையையும் மதித்து, அதை அன்றாட வாழ்க்கையின் வழிகாட்டியாக கடைப்பிடிக்க வேண்டும் என்றும் மாமன்னர் வலியுறுத்தினார்.
அவ்வாறு, ருக்குன் நெகாரா கொள்கைகளை பின்பற்ற மறுக்கும் எந்த மலேசியரையும், மலேசியக் குடிமகன் என்று அழைக்கத் தகுதியானவர் அல்ல என்று தாம் கருதுவதாகவும் மாமன்னர் தமது உரையில் தெரிவித்துள்ளார்.
அதேவேளையில், கடந்த 1969-ஆம் ஆண்டு, மே 13 -ஆம் தேதி, நாட்டில் நடந்த இனக்கலவரங்களை நினைவுகூர்ந்த மாமன்னர், அச்சம்பவமானது மலேசிய மக்களின் ஒற்றுமையைச் சிதைத்ததுடன், நாட்டின் நிலைத்தன்மையையும் சீர்குலைத்த வரலாற்றை மீண்டும் நடக்க அனுமதிக்கக்கூடாது என்றும் தெரிவித்தார்.
குறிப்பிட்ட சில தரப்பினர் வரம்பு மீறிச் செயல்பட்டதாலும், பிறரை அவமதித்ததாலும், பரஸ்பர மரியாதையையும் நாட்டின் இறையாண்மையையும் பேணத் தவறியதாலுமே அந்த இனக்கலவரங்கள் நிகழ்ந்தன என்பதையும் மாமன்னர் சுட்டிக் காட்டினார்.
இந்நிகழ்வில், மாமன்னருடன் மாட்சிமை தங்கிய பேரரசியார் ராஜா ஸாரித் சோஃபியாவும் கலந்து கொண்டார்.
மேலும், பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மற்றும் அவரது துணைவியார் வான் அஸிஸா வான் இஸ்மாயில், துணைப் பிரதமர் டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹ்மாட் ஸாஹிட் ஹாமிடி, தொடர்புத்துறை அமைச்சர் டத்தோ ஃபாஹ்மி ஃபாட்சீல், அமைச்சரவை உறுப்பினர்கள், மற்றும் வெளிநாட்டு பிரமுகர்களும் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.








