மலாக்கா, ஜூன்.01-
மலாக்கா தஞ்சோங் மின்யாக் பகுதியில், வெளிநாட்டினர் பயணம் செய்த கார்களுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டதாக டிக் டாக்கில் பரவி வரும் தகவலை போலீசார் மறுத்துள்ளனர்.
வைரலான அக்காணொளி, இரண்டு வெவ்வேறு இடங்களில் பதிவு செய்யப்பட்ட காட்சிகளை ஒன்றிணைத்து தொகுக்கப்பட்டது என்று நம்பப்படுவதாக மலாக்கா தெங்கா மாவட்ட போலீஸ் தலைவர் ஹாலிம் அபாஸ் தெரிவித்துள்ளார்.
விசாரணையில், சம்பந்தப்பட்ட போலீஸ் வாகனமானது, தஞ்சோங் மின்யாக்கில் உள்ள மஸ்ஜிட் துன் முஹமட் காலில் யாக்கோப் அருகே ஒரு சந்திப்பிலிருந்து வெளியேறும் காட்சி பதிவு செய்யப்பட்டுள்ளதை அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
அதேவேளையில், அந்த போலீஸ் வாகனமானது, எந்த வாகனத்திற்கும் பாதுகாப்பு வழங்கவில்லை என்றும், ஒரே நேரத்தில் சில வாகனங்களும் அதே சந்திப்பிலிருந்து வெளியேறியதால், அவை போலீஸ் வாகனத்தைப் பின்தொடர்வது போல தோன்றியது, ஒரு தற்செயலான சம்பவமே என்றும் ஹாலிம் அபாஸ் விளக்கமளித்துள்ளார்.








