எலிக்கழிவுகள் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பினாங்கு, ஜார்ஜ் டவுனிலுள்ள தேசிய வகைத் தமிழ்ப்பள்ளி ஒன்றின் உணவக வளாகத்தை சுத்தம் செய்து கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.
அப்பணிகளை உணவக ஒப்பந்ததாரர் முழுமையாக மேற்கொள்வதை உறுதி செய்வதாக பினாங்கு கல்வித் துறை உறுதியளித்துள்ளது.
இது குறித்து பினாங்கு மாநில கல்வி இயக்குநர் முகமட் ஜியாவுதீன் மாட் சாத் வெளியிட்டுள்ள அறிக்கையில், சுகாதாரமற்ற சூழலில் உணவகம் இயங்கியதால், உணவுச் சட்டம் 1983 பிரிவு 11ன் கீழ் நேற்று வியாழக்கிழமை அந்த உணவகம் இரண்டு வாரங்களுக்கு மூட உத்தரவிடப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
மேலும், வளாகத்தில் எலிக்கழிவுகள் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சுகாதார அதிகாரிகள் மேற்கொண்ட வழக்கமான சோதனையின் அடிப்படையிலேயே, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் இன்று வெளியிட்டுள்ள தகவலில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளையில், அந்த உணவக உரிமையாளர்கள் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது என்பதையும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.








