ஆண்களை மேம்படுத்துவதற்கான கொள்கைகளை உருவாக்குவதற்காக, தேசிய லெலாகி புடிமான் என்னும் தேசியத் திட்டம் ஒன்று இந்த மாதத்தில் தொடங்கப்படவுள்ளது.
13-வது மலேசியத் திட்டத்தின் கீழ் 18 மாதங்களுக்கு மேற்கொள்ளப்படும் இந்த ஆய்வு, குடும்ப மற்றும் தேசிய நலனுக்குப் பங்களிக்கும் பொறுப்புள்ள ஆண்களை உருவாக்க உதவும் என்று மகளிர் , குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டுத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ நான்சி சுக்ரி தெரிவித்துள்ளார்.
இன்றைய நவீன சூழலில் இளம் தந்தையர்கள் எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடி, குடும்பப் பொறுப்புகள் போன்ற சவால்களுக்கு மத்தியில் அவர்களின் மன ஆரோக்கியம், பெற்றோருக்குரிய திறன்கள் மற்றும் குணநலன் மேம்பாடு ஆகியவற்றை ஆதரிப்பதே இந்த ஆய்வின் நோக்கமாகும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் பெண்களை விட ஆண்களின் தற்கொலை விகிதம் மூன்று மடங்கு அதிகமாக இருப்பதோடு, கடந்த ஆண்டில் பதிவான குடும்ப வன்முறைச் சம்பவங்களில் 95 விழுக்காட்டினர் ஆண்கள் என்றும், விவாகரத்து வழக்குகள் 60,457 ஆக அதிகரித்துள்ளன என்றும் சுகாதார அமைச்சு மற்றும் போலீஸ் துறையின் புள்ளிவிவரங்களை மேற்கோள் காட்டி நான்சி சுக்ரி இதனை குறிப்பிட்டார்.








