தனது கைப்பேசியில் வைத்திருந்த ஆபாச மற்றும் நிர்வாணப் படங்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்தது மற்றும் மற்றொரு பெண்ணின் புகை ப்படத்தை நிர்வாணக் கோலத்தில் தணிக்கை செய்து பகிர்ந்ததாக 33 வயது தனித்து வாழும் தாயாரான ஓர் இந்திய மாது, மலாக்கா, ஆயர் குரோ மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டார்.
டி.வி.பவித்ரா என்ற அந்த மாது, மாஜிஸ்திரேட் ஷார்தா ஷியென்ஹா முகமட் சுலைமான், முன்னிலையில் நிறுத்துப்பட்டு அவருக்கு எதிராக குற்றச்சாட்டுகள் வாசிக்கப்பட்டன.
கடந்த ஜூன் 28 ஆம் தேதி மலாக்கா, கோத்தா லக்சமணா ஜெயாவில் உள்ள ஓர் அடுக்குமாடி குடியிருப்பில், தனது ஸ்மார்ட்போனில் ஆபாசப் படங்களை வைத்திருந்ததாக பவித்ராவிற்கு எதிராக முதலாவது குற்றச்சாட்டு கொண்டு வரப்பட்து.
அதேவேளையில் கடந்த ஜுன் 24 ஆம் தேதி மலாக்கா, தாமான் மலாக்கா ராயாவில் ஒரு வீட்டில் 36 வயது பெண்ணுக்கு மன உளைச்சலையும், பயத்தையும் ஏற்படுத்தும் வகையில் அவரின் புகைப்படத்தை ஆபாச கோலத்தில் தணிக்கை செய்து சமூக ஊடகங்களில் பகிர்ந்ததாக பவித்ராவிற்கு எதிராக மற்றொரு குற்றச்சாட்டு கொண்டு வரப்பட்டது.
குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடிய பட்சம் 3 ஆண்டுகள் சிறை அல்லது அபராதம் அல்லது இரண்டுமே விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டத்தின் கீழ் பவித்ரா குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.
எனினும் தனக்கு எதிரான இரண்டு குற்றச்சாட்டுகளையும் மறுத்து பவித்ரா விசாரணை கோரியதால் அவரை ஒரு நபர் உத்தரவாதத்துடன் 5 ஆயிரம் ரிங்கிட் ஜாமீனில் விடுவிக்க மாஜிஸ்திரேட் ஷார்தா ஷியென்ஹா அனுமதி அளித்தார்.
அதேவேளையில் இவ்வழக்கு விசாரணை முடியும் வரையில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு எந்தவொரு இடையூறும் விளைவிக்கக்கூடாது என்று பவித்ராவிற்கு நீதிமன்றம் எச்சரித்தது.








