மாணவர்களின் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட ஒவ்வொரு பிரச்சினையையும், வெறும் பாதுகாப்பு குறைபாடாக மட்டும் பார்க்காமல், அதன் பின்னணியில் உள்ள மனநலம் மற்றும் பல்வேறு காரணங்களின் அடிப்படையில் கல்வி அமைச்சு தனித்தனியாக ஆராயும் என்று அதன் அமைச்சர் ஃபத்லினா சிடெக் தெரிவித்துள்ளார்.
பள்ளிகளில் மாணவர்களுக்கு பாதுகாப்பான சூழலை உறுதி செய்ய, பல்வேறு ஏஜென்சிகளை உள்ளடக்கிய சிறப்புக் குழுக்கள் மூலம் பாதுகாப்பு முறை வலுப்படுத்தப்படும் என்று ஃபத்லினா சிடெக் குறிப்பிட்டுள்ளார்.
பள்ளிகளில் பகடிவதை போன்ற சூழ்நிலைகளை தடுப்பதற்காக, கடந்த ஜூன் 16 முதல் அமலுக்கு வந்த '2026 ஆம் ஆண்டு பகடிவதை எதிர்ப்புச் சட்ட நடைமுறைகளுக்கு ஏற்ப புதிய வழிகாட்டுதல்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன.
மேலும், மாணவர்கள் தங்கும் விடுதிகளை கொண்ட பள்ளிகளில் இரவு நேரக் கண்காணிப்பை தீவிரப்படுத்த 300 புதிய வார்டன்கள் நியமிக்கப்பட்டுள்ளதோடு, அங்குள்ள சிசிடிவி கேமராக்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு 333 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது என்றும் ஃபத்லினா சிடெக் கூறியுள்ளார்.








