நாட்டை உலுக்கிய 1எம்டிபி ஊழலில் போலீசாரால் தேடப்பட்டு வரும் வர்த்தகர் ஜோ லோவுக்கு, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பினால் பொதுமன்னிப்பு வழங்க ஆலோசிக்கப்பட்டு வருவதாக 'தி அட்லாண்டிக்' செய்தி வெளியிட்டுள்ளது.
அமெரிக்காவின் 250-ஆவது சுதந்திர தின நாளை முன்னிட்டு சுமார் 250 பேருக்கு அதிபர் டிரம்ப் பொதுமன்னிப்பு வழங்கத் திட்டமிட்டுள்ள வேளையில், இந்த ஆலோசனையில் ஜோ லோவின் பெயரும் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.
இருப்பினும், இந்தச் செய்தியை மறுத்துள்ள வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர், தற்போது பொது மன்னிப்புக்கு பரிந்துரைக்கப்பட்டவர்களின் பெயர் பட்டியலில் மலேசியாவினால் தீவிரமாக தேடப்பட்டு வரும் தொழில் அதிபர் ஜோ லோவின் பெயர் இல்லை என்பதை தெளிவுபடுத்தியுள்ளார்.
இந்த விவகாரம் குறித்துப் பேசிய பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், ஜோ லோ தொடர்பான எந்தவொரு பொதுமன்னிப்பு விண்ணப்பத்தையும் மலேசியா பரிசீலிக்காது என்றும், நீதிமன்ற விசாரணைகள் இன்னும் தொடர்ந்து கொண்டிருப்பதால் இது ஒரு அவசியமற்ற விஷயம் என்றும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
அமெரிக்க நிதி அமைப்பின் மூலம் சட்டவிரோத பணப் பரிமாற்றம் செய்ததாகவும், 1எம்டிபி நிதியிலிருந்து சுமார் 4.5 பில்லியன் அமெரிக்க டாலர் நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதற்கு ஜோ லோ தான் முக்கிய சூத்திரதாரி என்றும், அமெரிக்க அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர். ஆனால், தாம் எந்த குற்றத்தையும் இழைக்க வில்லை என்று தலைமறைவாக இருந்து வரும் ஜோ லோ தொடர்ந்து மறுத்து வருகிறார்.








