10 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன சமூக ஆர்வலர் அம்ரி சே மாட்டின் குடும்பத்தாருக்கு அரசாங்கம் 3 மில்லியன் ரிங்கிட் இழப்பீடு வழங்க வேண்டும் என்ற நீதிமன்றத் தீர்ப்பின் அமல்படுத்தலை கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் இன்று தற்காலிகமாக நிறுத்தி வைக்க அனுமதி வழங்கியது.
அப்பீல் நீதிமன்றத்தில் அரசாங்கம் தாக்கல் செய்துள்ள மேல்முறையீடு தீர்ப்பாகும் வரை, அந்த இழப்பீட்டு தொகையை செலுத்த வேண்டிய கட்டாயத்திலிருந்து அரசாங்கத்திற்கு தற்காலிக விலக்கு வழங்கி நீதித்துறை ஆணையர் சலிதா சைடான் உத்தரவிட்டார்.
முன்னதாக, அம்ரியின் மனைவி நோர்ஹயாத்தி அரிஃபின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சுரேந்திர ஆனந்த், இந்த வழக்கு அரசுப் பொதுநிதியைச் சார்ந்தது என்பதால் தீர்ப்பின் அமல்படுத்தலை தற்காலிகமாக நிறுத்துவதற்கு தனது வாடிக்கையாளர் சம்மதம் தெரிவித்துள்ளதாக தெரிவித்தார்.
என்றாலும், அம்ரி சே மாட் காணாமல் போன சம்பவம் தொடர்பான விசாரணை, மேல்முறையீட்டு வழக்கின் முடிவு எப்படியிருந்தாலும் தொடர்ந்து நடைபெற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.








