கோலாலம்பூர், பிப்ரவரி.08-
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்க, அதற்கெனத் தனிச் சட்டம் இயற்றுவது, அச்செயலிகளுக்கு உரிமம் வழங்குவது ஆகியன குறித்து அரசாங்கம் ஆராய்ந்து வருகிறது. தற்போதைக்கு செயற்கை நுண்ணறிவு தொடர்பான குற்றங்கள் இணையத் தொடர்புச் சட்டங்களின் கீழ் கையாளப்பட்டாலும், எதிர்காலத்தில் இதற்கெனத் தனிச் சட்டம் கொண்டு வருவது குறித்து இலக்கவியல் அமைச்சு ஆலோசித்து வருவதாக அமைச்சர் டத்தோ ஃபாமி ஃபாட்சீல் தெரிவித்தார்.
குறிப்பாக, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஆபாசமான அல்லது சிறார் பாலியல் வன்கொடுமை தொடர்பான உள்ளடக்கங்களைப் பரப்புவோர் மீது தற்போதைய சட்டங்களின் கீழ் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அவர் எச்சரித்தார். ஆபாசமான படங்களை உருவாக்கிய விவகாரத்தில் 'Grok' எனும் AI தளம் தற்காலிகமாக முடக்கப்பட்டதைச் சுட்டிக் காட்டிய அவர், பாதுகாப்பு அமைப்புகளின் பரிந்துரையின் அடிப்படையில் அடுத்தக் கட்ட முடிவுகள் எடுக்கப்படும் என்றார்.








