பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் இன்று சபா மாநிலத்துக்கு பயணம் மேற்கொண்டு, கம்போங் பகியா பகுதியில் ஏற்பட்ட பெரும் தீ விபத்துக்குப் பிறகான நிலையை ஆய்வு செய்ய உள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட இந்த தீ விபத்தில் சுமார் 1,000 வீடுகள் முற்றிலும் எரிந்து சேதமடைந்தன.
இந்நிலையில், இன்று பிற்பகல் 4.20 மணியளவில், மஸ்ஜித் கம்போங் பகியா அருகே விபத்து இடத்தை, அன்வார் பார்வையிடத் தொடங்குவார்.
அதன் பின்னர், வீடுகளை இழந்து தற்காலிக தங்குமிடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களை சந்திக்க உள்ளார்.
முதலில் 4.35 மணியளவில், செக்கோலா கெபாங்சான் காஸ் தற்காலிக முகாமில் பாதிக்கப்பட்டவர்களை சந்திப்பார்.
அதனைத் தொடர்ந்து, மாலை 5 மணியளவில், டேவான் பிபிஆர் தாமான் பத்து சாப்பி மற்றும் 5.30 மணியளவில், டேவான் லிந்தாஸ் சிபுகா ஆகிய தங்குமிடங்களையும் பார்வையிடவுள்ளார்.
இந்த பணிப் பயணத்தின் போது, தற்காலிக முகாம்களில் உள்ள பாதிக்கப்பட்டவர்களின் நிலையை மதிப்பீடு செய்வதுடன், அவர்களுக்கு உதவிகள் சரியாக வழங்கப்படுகிறதா என்பதையும் பிரதமர் உறுதி செய்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கம்போங் பகியா கிராமப் பகுதியில் ஏற்பட்ட இந்த தீ விபத்து, நான்கு ஹெக்டேருக்கு மேற்பட்ட பரப்பளவை பாதித்து, பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.








