ரவாங், ஜூன்.07-
குண்டாங், ரவாங்கில் அமைந்துள்ள தஹ்பிஸ் சமயப் பள்ளி ஒன்றில், உணவில் ஏற்பட்ட விஷத்தன்மை காரணமாக, முதியவர்கள் உட்பட 27 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து சுங்கை பூலோ மாவட்ட போலீஸ் தலைவர் முஹமட் ஹாஃபிஸ் முஹமட் நோர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த ஜூன் 4-ஆம் தேதி, வெளியிலிருந்து பெறப்பட்ட உணவை உட்கொண்ட பின்னர், அங்கிருந்த மாணவர்களும் முதியோரும் வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற அறிகுறிகளை அனுபவித்ததாகத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட அனைவரும் அருகிலுள்ள மருத்துவ மையங்களிலும், சுங்கை பூலோ மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இச்சம்பவத்தில் 13 முதல் 84 வயது வரையிலான மொத்தம் 27 பேர் பாதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சம்பவத்தின் உண்மையான காரணத்தைக் கண்டறிய கோம்பா மாவட்ட சுகாதார அலுவலக அதிகாரிகள் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தி, சாட்சியங்களையும் உணவு மாதிரிகளையும் சேகரித்து ஆய்வக பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர்.
அதேவேளையில், மலேசிய சுகாதார அமைச்சு இச்சம்பவம் தொடர்பாக விசாரணைக் கோப்பைத் திறந்து மேலதிக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.








