பெசுட், ஜூன்.07-
திரெங்கானுவின் புகழ்பெற்ற பந்தாய் புக்கிட் கெளுவாங் கடற்கரையில் கடந்த மே மாதம் முதல் கடந்த வியாழக்கிழமை வரை விஷமுள்ள ஜெல்லி மீன்களின் தாக்குதலால் 31 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பெசுட் உள்நாட்டு பாதுகாப்புப் படை அதிகாரி Mohd Fazlien Jaafar வெளியிட்டுள்ள தகவலில், பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் கடலில் நீந்திய சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் என்று தெரிவித்துள்ளார்.
கடந்த மே மாதத்தில் மட்டும் 23 பேர் ஜெல்லி மீன் தாக்குதலுக்கு உள்ளாகியிருந்த நிலையில், ஜூன் மாதத்தின் முதல் வாரத்தில் மேலும் 8 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
இந்த எண்ணிக்கையானது, ஜெல்லி மீன் கொட்டிய பின்னர், கடற்கரையில் உள்ள உள்நாட்டுப் பாதுகாப்புப் படையின் கண்காணிப்பு கோபுரத்தில், சிகிச்சை பெற்றவர்களின் அடிப்படையில் தொகுக்கப்பட்டதாகவும், அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே ஜெல்லி மீன்கள் கொட்டப்பட்டவர்களுக்கு உடனடியாக முதலுதவி சிகிச்சை வழங்கப்பட்டதாகவும், பொதுவாக பாதிக்கப்பட்டவர்களுக்கு கை உள்ளிட்ட உடல் பகுதிகளில் சிவப்பு நிறத் தோல் வீக்கம் மற்றும் கடுமையான வலி போன்ற அறிகுறிகள் ஏற்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.








