இவ்வாண்டு நடைபெறவுள்ள சுக்மா 2026 விளையாட்டுப் போட்டிகள் தொடர்பாக, இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் டாக்டர் முகமது தவ்பிக் ஜொஹாரிவுடனான பேச்சுவார்த்தையில், மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான் ஷராபுதீன் இட்ரிஸ் ஷா திருப்தியடைந்திருப்பதாகத் தகவல்கள் கூறுகின்றன.
நேற்று ஷா ஆலம், இஸ்தானா புக்கிட் காயாங்கான்கில் டாக்டர் தவ்பிக் சுல்தானை சந்தித்து, அவருக்கு விளையாட்டுப் போட்டிகள் குறித்து விளக்கமளித்தார்.
இது குறித்து சிலாங்கூர் அரச குடும்ப அலுவலகம் வெளியிட்ட முகநூல் பதிவில், தற்போதைய பொருளாதார சூழ்நிலையை கருத்தில் கொண்டு செலவினங்களை குறைக்கும் நோக்கில் ஏற்பாட்டாளர்கள் மேற்கொண்ட நடவடிக்கைகளில், சுல்தான் திருப்தி அடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளையில், விளையாட்டுப் போட்டிகளுக்கான அனைத்து செலவுகளும் அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டுமே இருக்க வேண்டும் என்றும் சுல்தான் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், விளையாட்டுப் போட்டிகளின் மேம்பாடு மற்றும் இளம் வீரர், வீராங்கனைகளின் முன்னேற்றத்திற்கு மட்டுமே முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.








