கடந்த ஜூலை 4-ஆம் தேதி ஷா ஆலம் ரயில் நிலையத்தில் ரயிலின் ஒரு பாகம் மின் கடத்தியுடன் உரசியதால், சிறிய அளவிலான வெடிச் சத்தமும் தீப்பொறியும் ஏற்பட்டது. இச்சம்பவத்தில் யாருக்கும் எந்தவிதமான காயங்களும் ஏற்படவில்லை என்று ரேபிட் கே.எல் நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. விபத்து நடந்தவுடன் அந்த ரயில் உடனடியாகச் சேவையிலிருந்து நீக்கப்பட்டு, பணிமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது. பழுதடைந்த பாகங்கள் மாற்றப்பட்டு, விரிவான ஆய்வுகளுக்குப் பிறகு அந்த ரயில் மீண்டும் பாதுகாப்பாகச் சேவைக்குத் திரும்பியுள்ளது.
பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத் தற்பொழுது மற்ற ரயில்களிலும் விரிவான சோதனைகள் மற்றும் கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ரேபிட் கே.எல் தெரிவித்துள்ளது. ஷா ஆலம் வழித்தடத்தின் அன்றாட ரயில் சேவைகள் எவ்விதத் தடையுமின்றி வழக்கம்போலத் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அந்நிறுவனம் மேலும் விளக்கம் அளித்துள்ளது.








