Jul 14, 2026
Thisaigal NewsYouTube
14 வயது பள்ளி மாணவர் கடத்தப்பட்டதாகக் கூறிய புகார் – பொய்யானது.
தற்போதைய செய்திகள்

14 வயது பள்ளி மாணவர் கடத்தப்பட்டதாகக் கூறிய புகார் – பொய்யானது.

Share:

நேற்று முன்தினம் ஜூலை 12 ஆம் திகதி கோலா நெராங் பகுதியில் 14 வயதுடைய ஆண் மாணவர் இரு அடையாளம் தெரியாத ஆண்களால் கடத்தப்பட்டதாகக் கூறி அளிக்கப்பட்ட புகார் தொடர்பாக படாங் தெராப் மாவட்ட போலீசார் ஒரு புகாரைப் பெற்றதை உறுதிப்படுத்தினர். போலீசார் மேற்கொண்ட நடவடிக்கையின் மூலம், சம்பவத்தில் பாதிக்கப்பட்டதாகக் கூறப்பட்ட மாணவர் துரியான் புருங் கோத்தா புத்ரா சாலையோரத்தில் பாதுகாப்பாகக் கண்டுபிடிக்கப்பட்டிருப்பத்தாக கெடா மாநில தலைமை போலீஸ் இயக்குனர் டத்தோ அட்ஸ்லி அபு ஷா தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட மாணவர் ஆரம்பத்தில் அளித்த தகவலின்படி 12/7/2026 ஆம் திகதி மாலை சுமார் 5.50 மணியளவில் கெடா மாநிலம் கோலா நெராங் தீயணைப்பு நிலையத்திற்கு அருகிலுள்ள பேருந்து நிறுத்துமிடத்தில் இருந்தபோது இரண்டு சந்தேக நபர்கள் அவரை அணுகி அவரது கண்கள் மற்றும் வாயை மூடி, வலுக்கட்டாயமாக ஒரு வாகனத்திற்குள் தள்ளியதாகக் கூறினார். மேலும், அவரது கைகளும் கால்களும் கட்டப்பட்டதாகவும் பின்னர் சாலையோரத்தில் கைவிடப்பட்டதாகவும் தெரிவித்தார். பொதுமக்களிடமிருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில் போலீசார் அவரைக் கண்டுபிடித்துச் சம்பவம் தொடர்பாக புகார் பதிவுச் செய்வதற்காகக் கோத்தா புத்ரா போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விரிவான விசாரணையில் பாதிக்கப்பட்ட மாணவர் அளித்த புகார் பொய்யானது என்றும், பள்ளியில் பெண்கள் கழிப்பறைக்குள் தவறுதலாக நுழைந்ததால் ஏற்பட்ட அவமானம் மற்றும் மனஅழுத்தம் காரணமாக அவர் இந்தக் கதையை உருவாக்கியதும் கண்டறியப்பட்டது.

அந்த மாணவர் தெரிவித்ததன்படி பள்ளி முடிந்த பிறகு பள்ளி வளாகத்தில் உள்ள இஸ்லாமிய தொழுகை மையம் அருகிலுள்ள பெண்கள் கழிப்பறைக்குள் அவர் தவறுதலாக நுழைந்துள்ளார். அங்கிருந்து வெளியே வரும்போது, கழிப்பறையில் இருந்த ஒரு மாணவியுடன் எதிர்பாராத விதமாக மோதியுள்ளார். இதையடுத்து சில மாணவிகள் அவரது செயலுக்கு எதிர்ப்புத் தெரிவித்துக் கிண்டல் செய்ததால் அவர் பதற்றமடைந்து பள்ளி வளாகத்திலிருந்து ஓடிச் சென்றுள்ளார். வெளியேறிய பின்னரும், அந்த மாணவிகள் சிலர் அவரைப் பின்தொடர்ந்துக் கத்திக்கொண்டே இருந்ததாக அவர் தெரிவித்தார்.

மனஅழுத்தத்திலும் குழப்பத்திலும் இருந்த மாணவர், ஒரு மோட்டார் சைக்கிளை நிறுத்தி, லாடாங் சுங்கை செராயா பகுதிக்கு செல்ல உதவி கேட்டுள்ளார். பின்னர், வடக்கு நோக்கி எந்த இலக்குமின்றி நடந்து சென்றபோது, மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த நபர் அவரை ஏற்றிச் சென்று துரியான் புருங், கோத்தா புத்ரா பகுதியில் இறக்கி விட்டுள்ளார். அதன் பின்னர், அவர் சாலையோரத்தில் போலீசாரால் கண்டுபிடிக்கப்பட்டார்

இந்த வழக்கு, குற்றவியல் சட்டம் பிரிவு 182-ன் கீழ் பொய்யான போலீஸ் புகார் அளித்த குற்றத்திற்காக விசாரிக்கப்பட்டு வருகிறது. குற்றம் நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சமாக ஆறு (6) மாதங்கள் வரை சிறைத்தண்டனை அல்லது RM2,000 வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம் என்றார் டத்தோ அட்ஸ்லி பின் அபு ஷா.

Related News