கோலாலம்பூர், நவ.12-
தேசிய தற்காப்பு பல்கலைக்கழகத்தின் இராணுவ பயிற்சி அக்கடமியில் பகடிவதை சம்பவங்கள் அடிக்கடி நிகழ்வது குறித்து, தற்காப்பு அமைச்சு தீவிரமாக ஆராய வேண்டும் என்று மாட்சிமைத் தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் கேட்டுக்கொண்டார்.
பகடிவதை சம்பவங்கள் ஒரு சங்கிலித் தொடரைப் போன்று அடிக்கடி நிகழ்ந்துக்கொண்டு இருப்பதை வெறுமனே அனுமதி முடியாது என்று மாமன்னர் தெரிவித்தார்.
காரணம், இதுபோன்ற எதிர்மறையான சம்பவங்கள், மாணவர்களின் நல்வாழ்வை பாதிக்கும் என்பதுடன் ஓர் உ யர் கல்விக்கூடம் என்ற முறையில் தற்காப்பு பல்கலைக்கழகத்தின் தோற்றத்திற்கு களங்கத்தை உண்டு பண்ணும் என்று மாமன்னர் நினைவுறுத்தினார்.
மனோவியல் மற்றும் உடல் ரீதியாக வலிமையைப் பெறுவதற்கு இராணுவப்படையைச் சேர்ந்தவர்களுக்கு கடும் பயிற்சிகள் வழங்கப்படுவது வழக்கமானதாகும். ஆனால், ஓர் உயிரை பறிக்கும் அளவிற்கு அல்லது உடல் ரீதியாக காயங்களை விளைவிக்கும் அளவிற்கு அது தனிநபரின் பகடிவதையாக மாறக்கூடாது என்று சுல்தான் இப்ராஹிம் நினைவுறுத்தினார்.
தேசிய தற்காப்பு பல்கலைக்கழகத்தின் இராணுவ பயிற்சி அக்கடமியில் பகடிவதை சம்பவம் நிகழ்வது இது முதல்முறை அல்ல. மாறாக, உயிரை பறிக்கும் அளவிற்கு இது அடிக்கடி நிகழ்ந்து வருகிறது. இது உண்மையிலேயே மனிதாபிமானற்ற செயலாகும் என்று மாமன்னர் வர்ணித்தார்.








