நாட்டிற்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்ற 25 மியான்மர் நாட்டினரை மலேசிய கடல்சார் அமலாக்க ஏஜென்சி முகமையினர் இன்று அதிகாலையில் கைது செய்துள்ளனர். காலை 3.30 மணியளவில் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், சுமார் 4.25 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையின்போது 12 முதல் 42 வயதுக்குட்பட்ட அந்த மியான்மர் நாட்டினரை அதிகாரிகள் சுற்றி வளைத்துப் பிடித்துள்ளனர். .
பினாங்கு, பெனாகாவில் உள்ள குவாலா மூடா நதி முகத்துவாரத்தை நோக்கி அதிவேகமாக வந்த சந்தேகத்திற்குரிய fiber படகு ஒன்றை ரோந்துப் படகு பின்தொடர்ந்தபோது, அந்தப் படகு பயணிகளை கடற்கரையில் இறக்கிவிட்டு தப்பியோடியது. கடற்கரையில் இறக்கிவிடப்பட்ட மியான்மர் நாட்டினரை அழைத்துச் செல்வதற்காக அங்கு ஒரு லாரி காத்திருந்ததையும் அதிகாரிகள் கவனித்துள்ளனர்.
முறையான ஆவணங்கள் இன்றி நாட்டிற்குள் நுழைந்தது மற்றும் அங்கீகரிக்கப்படாத வழித்தடங்களைப் பயன்படுத்தியது ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக பினாங்கு கடல்சார் அமலாக்க ஏஜென்சியின் இயக்குனர் கமது சுஃபி முகமது ராம்லி தெரிவித்துள்ளார்.








