கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தின் இரண்டாவது முனையத்தில், வெளிப்புற பால்கனி பகுதியிலிருந்து விழுந்து 30 வயதுடைய அல்ஜீரிய நாட்டுப் பிரஜை ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை இரவு சுமார் 9.10 மணியளவில் இந்தச் சம்பவம் நடந்ததாக கே.எல்.ஐ.ஏ மாவட்ட போலீஸ் தலைவர் உதவி கமிஷனர் எம்.ரவி தெரிவித்தார். சம்பவ இடத்திலேயே மருத்துவக் குழுவினர் அவருக்கு அவசர சிகிச்சை அளித்தனர். பின்னர் அவர் தீவிர சிகிச்சைக்காக சைபர்ஜெயா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
"இருப்பினும், கடந்த சனிக்கிழமை அதிகாலை 2.55 மணியளவில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததை மருத்துவமனை உறுதி செய்தது," என்று எம். ரவி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் குறித்து தற்போது 'திடீர் மரணம்' எனப் பதிவு செய்யப்பட்டு, உயிரிழப்பிற்கான காரணம் குறித்து போலீஸ் தரப்பில் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. நேற்று இதே போன்று சீன நாட்டை சேர்ந்த 27 வயது பெண் ஒருவர் இதே முனையத்தின் மூன்றாவது மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.








