கோலா நெருஸ், பிப்ரவரி.08-
கிராமப்புற, வட்டார வளர்ச்சி அமைச்சு, அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கான கிராமப்புற மேம்பாட்டு இலக்குகளை உள்ளடக்கிய '2026-2030 வியூகத் திட்டத்தை' அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது. நாட்டின் 24 விழுக்காடு மக்களான சுமார் 8. 17 மில்லியன் கிராமப்புறவாசிகள் பயன் பெறும் வகையில், 20 உத்திகளும் 49 முன்முயற்சிகளும் இத்திட்டத்தின் கீழ் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. கிராமப்புறப் பொருளாதாரம், மனித மூலதனம், உள்கட்டமைப்பு, கிராமப்புற தொழில்முனைவோர், சேவை வழங்கல் முறை ஆகிய ஐந்து முக்கிய துறைகளில் இத்திட்டம் அதிக கவனம் செலுத்துகிறது.
கடந்த 2022 முதல் 2024 வரையிலான காலத்தில் கிராமப்புற வறுமை விகிதம் 12.9 விழுக்காட்டிலிருந்து 9.9 விழுக்காடாகக் குறைந்துள்ளதைச் சுட்டிக் காட்டிய துணைப் பிரதமர் டத்தோ ஶ்ரீ அஹ்மாட் ஸாஹிட் ஹமிடி, புதிய திட்டம் இந்த வளர்ச்சியை மேலும் துரிதப்படுத்தும் என்றார். கிராமப்புறங்களிலிருந்து நகரங்களுக்கு மக்கள் இடம் பெயர்வது 0.5 விழுக்காடாகக் குறைந்துள்ளதும், தொழில்நுட்பக் கல்வி (TVET) பட்டதாரிகளின் வேலை வாய்ப்புத் திறன் 98.7 விழுக்காட்டை எட்டியுள்ளதும் அமைச்சின் முந்தைய சாதனைகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.








