ஜோகூர் பாரு, மே.05-
விபத்தில் காயமடைந்த பாதுகாவலர் பி. விக்னேஸ்வரனுக்கு 4 லட்சத்து 82 ஆயிரத்து 328 ரிங்கிட் இழப்பீடு வழங்க ஜோகூர் பாரு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆறு ஆண்டுகளுக்கு முன்பு Socar Mobility Sdn Bhd நிறுவனத்தின் வாடகைக் காரில் பயணம் செய்த போது ஏற்பட்ட விபத்து தொடர்பாக இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
2020-ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஜோகூர், உலு திராம், ஜாலான் காயா 11 பகுதியில் நடந்த இந்த விபத்தின் போது, காரின் பிரேக் செயல்படாததால் வாகனம், சாலையோர விளம்பரப் பலகையில் மோதி விக்னேஸ்வரன் பலத்த காயமடைந்தார். அவருடன் பயணித்த மற்றொரு பயணியான பவித்ராதேவி உயிரிழந்தார்.
வாகனத்தைச் சரியாகப் பராமரிக்கத் தவறியதற்காகவும், விசாரணை முடிவதற்குள் சம்பந்தப்பட்ட காரை அப்புறப்படுத்தியதற்காகவும் சோகார் நிறுவனம் பொறுப்பேற்க வேண்டும் என்று நீதித்துறை ஆணையர் நோராடுரா ஹம்ஸா கூறினார்.
காயத்தினால் வருமானத்தை இழந்த விக்னேஸ்வரனுக்கு, செஷன்ஸ் நீதிமன்றம் மறுத்த இழப்பீட்டுத் தொகையை தற்போது உயர்நீதிமன்றம் உறுதிச் செய்துள்ளது.








