முன்னாள் பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங் மற்றும் தொழிலதிபர் பாங் லி கூன் ஆகியோர் வெளிநாட்டு தொழிலாளர்களுக்கான விடுதி கட்டுமானம் தொடர்பான ஊழல் வழக்கில் விசாரணையை எதிர்கொள்ள வேண்டும் என்று புத்ராஜெயா அப்பீல் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
நீதிபதி அஸ்மான் அப்துல்லா தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு, தங்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை ரத்து செய்யக் கோரி லிம் குவான் எங் மற்றும் பாங் லி கூன் ஆகிய இருவரும் தாக்கல் செய்த மேல் முறையீட்டை தள்ளுபடி செய்தது.
இந்த மேல் முறையீடானது, இதற்கு முன்பு பினாங்கு உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
கடந்த 2020-ஆம் ஆண்டு, ஆகஸ்ட் மாதத்தில், 11.6 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான வெளிநாட்டு தொழிலாளர்களுக்கான விடுதி கட்டுமானத் திட்டத்திற்கு, அனுமதி கிடைக்க, தமது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்ததாக லிம் குவான் எங் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
தொழிலதிபர் பாங் லி கூன்னுடன் தொடர்புடைய அந்நிறுவனத்திற்கு, திட்ட அனுமதி கிடைக்க, தாம் உதவியதாக சுமத்தப்பட்டிருந்த அக்குற்றச்சாட்டுகளை மறுத்த லிம் குவான் எங் விசாரணை கோரினார்.
அதேவேளையில், இந்த குற்றத்தை புரிய லிம் குவான் எங்கிற்கு உதவியதாக பாங் லி கூன் மீதும் குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
இந்நிலையில், இவ்வழக்கில் தீர்ப்பை வாசித்த நீதிபதி நூரின் பஹாருத்தீன், சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு சந்தை மதிப்பை விடக் குறைவான விலையில் லிம் குவான் எங், பங்களா ஒன்றை வாங்கியது தொடர்பான முந்தைய வழக்கிற்கும், தற்போதைய ஊழல் வழக்கிற்கும் உண்மைகள் அல்லது சட்ட ரீதியான அம்சங்களில் எந்த ஒற்றுமையும் இல்லை என்று தெரிவித்தார்.
இதன் மூலம், லிம் குவான் எங் மற்றும் பாங் லி கூன் ஆகியோர் மீதான தற்போதைய ஊழல் வழக்கு விசாரணை தொடரும் என்பது உறுதியாகியுள்ளது.








