மாட்சிமை தங்கிய மலேசிய மாமன்னர் சுல்தான் இப்ராகிம், சபா மாநிலத்தின் குடாட் மற்றும் சண்டக்கான் பகுதிகளில் ஏற்பட்ட தீ விபத்துகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் 5 லட்சம் ரிங்கிட்டை தமது தனிப்பட்ட நிதியுதவியாக வழங்கியுள்ளார்.
இஸ்தானா நெகாராவில் இன்று நடைபெற்ற இந்த நிதியுதவி வழங்கும் நிகழ்வில், ஜோகூர் சுல்தான் இப்ராஹிம் அறக்கட்டளையான ஒய்.எஸ்.ஐ.ஜேவின் அறங்காவலர் தான் ஸ்ரீ அவின்தர்ஜித் சிங், சபா முதலமைச்சர் டத்தோ ஸ்ரீ ஹாஜிஜி நூரிடம் 5 லட்சம் ரிங்கிட் நிதியுதவியை அதிகாரப்பூர்வமாக வழங்கினார்.
ஒய்.எஸ்.ஐ.ஜே மூலம் வழங்கப்பட்ட இந்த நிதியுதவியானது, கடந்த ஏப்ரல் மாதம் குடாட் மற்றும் சண்டக்கான் மாவட்டங்களில் ஏற்பட்ட தீ விபத்துகளால் பாதிக்கப்பட்ட 1,000-க்கும் மேற்பட்ட மக்களின் சுமையை குறைக்கும் நோக்கில் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தீவிபத்துகளின் புள்ளி விவரங்களின் படி, குடாட் பகுதியில், 8 வீடுகள் தீக்கிரையானதில், 18 குடும்பங்களைச் சேர்ந்த 67 பேரும், சண்டக்கான் பகுதியில் 1,050 வீடுகள் தீக்கிரையானதில், 914 குடும்பங்களும் பாதிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.








