கோலாலம்பூர், மே.05-
எஸ்பிஎம் தேர்வில் 10A பெற்ற மாணவர்களுக்கு மெட்ரிகுலேஷன் இடங்களை வழங்குவதில் அரசாங்கம் வாக்குறுதியை மீறி விட்டதாக மசீச. தலைவர் வீ கா சியோங் கூறிய குற்றச்சாட்டை கல்வித் துணை அமைச்சர் வோங் கா வோ மறுத்துள்ளார். இக்குற்றச்சாட்டு அடிப்படையற்றது மற்றும் அவதூறானது என்று அவர் வர்ணித்துள்ளார்.
வீ கா சியோங் குறிப்பிட்ட 11 மாணவர்களும் ஏற்கனவே மெட்ரிகுலேஷன் இடங்களைப் பெற்று விட்டதை அமைச்சின் சரிபார்ப்பு உறுதிச் செய்துள்ளதாக வோங் தெரிவித்தார். அவர்களில் ஒருவர் கடந்த ஏப்ரல் 27-ஆம் தேதியும், மீதமுள்ள 10 பேர் ஏப்ரல் 29-ஆம் தேதியும் தங்களின் சேர்க்கை அறிவிப்புக் கடிதத்தைப் பெற்றுள்ளனர்.
முடிவுகளை மறுபரிசீலனை செய்த பிறகு 10A பெற்ற மாணவர்களின் தரவுகள் இறுதியாவதில் ஏற்பட்ட கால தாமதமே இந்தக் குழப்பத்திற்குக் காரணம் என்று வோங் கா வோ விளக்கமளித்தார்.
10A பெற்ற மாணவர்களுக்குத் தானியங்கி முறையில் இடங்கள் வழங்கப்படும் என்ற கொள்கை உறுதியாகப் பின்பற்றப்படுவதாக அவர் மீண்டும் வலியுறுத்தினார்.








