அலோர் ஸ்டார், மே.05-
கெடாவில் வன்முறையில் ஈடுபட்டு வந்த "கேங் அதான்" எனும் சட்டவிரோத கடன் வழங்கும் கும்பலைச் சேர்ந்த 31 முதல் 43 வயதுடைய நால்வர் மற்றும் ஒரு பெண்ணைப் போலீசார் கைது செய்துள்ளனர். இவர்கள் அனைவரும் ஏற்கனவே குற்றப் பின்னணி கொண்டவர்கள் என்றும், சோதனையில் இவர்கள் போதைப்பொருள் உட்கொண்டிருந்தது உறுதிச் செய்யப்பட்டுள்ளதாகவும் மாநில போலீஸ் தலைவர் டத்தோ அட்ஸ்லி அபு ஷா தெரிவித்தார்.
இந்தக் கும்பலின் மூளையாக இருந்து செயல்பட்டவர் என்று நம்பப்படும் தற்போது தலைமறைவாக உள்ள நபரைப் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இவர்களிடமிருந்து பெட்ரோல் கேன்கள், சாயம், மிரட்டல் நோட்டீஸ்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்தக் கும்பலின் கைதால், மாநிலத்தில் பதிவான 11 மிரட்டல் புகார்களுக்குத் தீர்வு காணப்பட்டுள்ளது.
தற்போது இவர்களுக்கு எதிராக 5 வெவ்வேறு சட்டப் பிரிவுகளின் கீழ் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்று டத்தோ அட்ஸ்லி தெரிவித்தார்.








