அம்னோவிலிருந்து விலகுவதாக ஜோகூர் மாநில சட்டமன்றத்தின் முன்னாள் சபாநாயகர் டத்தோ டாக்டர் முகமது புவாட் ஜர்காஷி அறிவித்துள்ளார்.
இந்த முடிவு தமது தனிப்பட்ட நலன்களுக்காக எடுக்கப்படவில்லை என்றும், ஜோகூர் மாநில அம்னோ விவகாரங்களில் வெளிப்புற தலையீடுகள் அதிகம் இருப்பதால் இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வரும் ஜோகூர் மாநில தேர்தலில் 56 தொகுதிகளிலும் அம்னோ போட்டியிடும் அளவிற்கு வலுவாக இருந்த போதிலும் கூட, தாம் வெளியேற வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் விவரித்துள்ளார்.
மேலும், முன்னாள் இளைஞர் பிரிவுத் தலைவர் கைரி ஜமாலுதீன், முன்னாள் உதவித் தலைவர் டத்தோஸ்ரீ ஹிஷாமுடின் உசேன் மற்றும் டான்ஸ்ரீ நோஹ் ஓமார் உள்ளிட்ட முக்கிய அரசியல் பிரமுகர்கள் மீண்டும் அம்னோவில் இணைவதாக தகவல்கள் வெளியாகியுள்ள சூழ்நிலையிலேயே தாம் கட்சியை விட்டு விலகுவதையும் புவாட் ஜர்காஷி சுட்டிக் காட்டியுள்ளார்.
இந்நிலையில், இந்த அறிவிப்பு ஜோகூர் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.








