அல்-புகாரி அறக்கட்டளையின் வரிவிலக்கு விவகாரத்தில், முன்னாள் நிதியமைச்சர் லிம் குவான் எங் மீது பெர்சத்து கட்சியின் தலைவர் முஹிதீன் யாசின் அவதூறு பரப்பியது உண்மைதான் என்று மேல்முறையீட்டு நீதிமன்றம், உயர் நீதிமன்றத்தின் முந்தைய தீர்ப்பை உறுதி செய்துள்ளது.
இருப்பினும், முஹிதீன் யாசின் செலுத்த வேண்டிய இழப்பீட்டுத் தொகையை நீதிமன்றம் குறைத்துள்ளது. முன்னதாக, உயர் நீதிமன்றம் விதித்த 1.35 மில்லியன் ரிங்கிட் இழப்பீட்டுத் தொகை மிக அதிகம் என்று குறிப்பிட்ட மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி அஸஹாரி கமல் ராம்லி, அதனை 4 லட்சத்து 50 ஆயிரம் ரிங்கிட்டாகக் குறைத்துள்ளார்.
மேலும், இந்தத் தொகைக்கு ஆண்டுக்கு 5 விழுக்காடு வட்டி விதிக்கக் கோரிய லிம் குவான் எங்கின் மேல்முறையீட்டு மனுவை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டதுடன், அவருக்கு 35 ஆயிரம் ரிங்கிட் வழக்குச் செலவாக வழங்கவும் முஹிதீனுக்கு உத்தரவிட்டது.








