கூட்டரசு அரசாங்கத்தில் உள்ள தலைமைத்துவம் மற்றும் ஒத்துழைப்பு குறித்து பிரதமர் டத்தோஸ்ரீ அன்வர் இப்ராஹிம் எழுப்பிய அரசியல் விமர்சனங்களுக்குப் பதிலளிக்க, ஜோகூர் மந்திரி பெசார் ஓன் ஹஃபீஸ் காஸி அரண்மனையை ஒரு கேடயமாகப் பயன்படுத்துவதாக அமானா கட்சியின் உதவித் தலைவர் மஹ்பூஸ் ஒமர் கடுமையாகக் கண்டித்துள்ளார்.
தங்களின் அரசியல் பதவிகளைத் தக்கவைத்துக் கொள்ள தலைவர்கள் அரச குடும்பத்தினரை அரசியல் விவாதங்களுக்குள் இழுக்கக் கூடாது என்று அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
ஜோகூர் மாநிலத் தேர்தலில் தேசிய முன்னணி தனித்துப் போட்டியிடும் என்றும், ஜசெக. கட்சியுடன் கூட்டு வைக்காது என்றும் ஓன் ஹஃபீஸ் காஸி உறுதியளித்திருந்தார். இது ஒற்றுமை அரசாங்கத்திற்குள் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், தான் அரண்மனைக்கும் மக்களுக்குமான கடமையையே செய்வதாகக் கூறி ஓன் ஹஃபீஸ் காஸி தன் மீதான விமர்சனங்களை மறுத்தார்.
இதற்குப் பதிலடி கொடுத்துள்ள மஹ்பூஸ் ஒமர், மலாய் ஆட்சியாளர்களின் பரிபாலனம், நாட்டின் ஒற்றுமையின் சின்னம் என்றும், ஒரு தலைவர் தன் மீதான விமர்சனங்களுக்குத் தன் சொந்த செயல்பாடுகள் மூலமே பதிலளிக்க வேண்டுமே தவிர, அரண்மனையை அரணாகப் பயன்படுத்தக் கூடாது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.








