குவந்தான், நவ. 15-
குவந்தானில் செல்லத்தக்க நடைமுறையை பின்பற்றாமல் பாக்சைட்டை உள்ளடக்கிய கனிம வள சுரங்க நடவடிக்கையில் ஈடுபட்ட தரப்பினருக்கு எதிராக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்.பி.ஆர்.எம். இன்று அதிரடியாக நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
இந்த சட்டவிரோத நடவடிக்கைக்கு கடந்த இரண்டு ஆண்டு காலமாக ஓர் அரசாங்க ஏஜென்சியின் உயர் அதிகாரி பாதுகாப்பு வழங்கி வந்ததாக கூறப்படுகிறது. குவந்தான், புக்கிட் கோ பகுதியில் எஸ்.பி.ஆர்.எம். மேற்கொண்ட நடவடிக்கையில் இரண்டு நிறுவனங்களின் உரிமையாளர்களையும், ஓர் அரசாங்க ஏஜென்சியின் உயர் அதிகாரியையும் அந்த ஆணையம் கைது செய்துள்ளது.
சம்பந்தப்பட்ட சட்டவிரோத கனிம வள சுரங்க நடவடிக்கைக்கு இடையூறு ஏற்படுத்தாமல் அதற்கு பாதுகாப்பு வழங்கி வந்ததற்காக அரசாங்க ஏஜென்சியின் உயர் அதிகாரி பல லட்சம் வெள்ளி லஞ்சம் பெற்றதாக கூறப்படுகிறது.








