கடந்த மாதம் தெலுக் இந்தானில் ஓர் இந்திய முதியவரை வெட்டிக்கொன்று விட்டு அவரின் வீட்டின் நகைகளை கொள்ளையடித்ததாக நான்கு இந்திய இளைஞர்கள் தெலுக் இந்தான் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டனர்.
பிரகாஷ் ராவ், எம். ஏ. அழகேஸ்வரன், தி. தியாகேசன் மற்றும் கே. சங்கர் என்ற 25 வயதுடைய அந்த நான்கு நண்பர்களும் மாஜிஸ்திரேட் நைதாதுல் அதிரா அஸ்மான் முன்னிலையில் நிறுத்தப்பட்டு, அவர்களுக்கு எதிரான கொலை குற்றச்சாட்டு, மொழிப்பெயர்ப்பாளர் உதவியுடன் தமிழில் வாசிக்கப்பட்டது.
கடந்த ஏப்ரல் 17 ஆம் தேதி காலை 6.30 மணியளவில் ஹிலிர் பேராக் மாவட்டம், தெலுக் இந்தான், பெக்கான் பாரு, லோரோங் எமாஸ் L2/1 என்ற முகவரியில் உள்ள ஓர் இந்தியர் வீட்டில் நுழைந்து, கொள்ளையடித்ததுடன் அந்த வீட்டின் குடும்பத் தலைவரான 70 வயது என். ஜெயகோபி என்பவரை வெட்டிக் கொலை செய்ததாக நால்வர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.
குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் சாகும் வரை தூக்குத் தண்டனை அல்லது கூடிய பட்சம் 40 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 302 பிரிவின் கீழ் நால்வரும் கொலை குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளனர்.
முதியவர் ஒருவர் வீட்டின் வாசலில் கொலை செய்யப்பட்ட காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலானதைத் தொடர்ந்து போலீசார் மேற்கொண்ட தீவிர தேடுதல் நடவடிக்கையில் மொத்தம் 7 இந்திய இளைஞர்கள் பிடிபட்டனர். இவர்களில் இன்னும் பிடிபடாமல் இருக்கும் மேலும் ஒரு நபருடன் குற்றஞ்சாட்டப்பட்ட இந்த நால்வரும் கொலையில் நேரடியாக சம்பந்தப்பட்டவர்கள் என்று ஹிலிர் பேராக் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி சுவா கோக் லியான் நேற்று தெரிவித்து இருந்தார்.










