கடந்த ஐந்து ஆண்டுகளாக வணிக வாகன ஓட்டுநர்கள் உட்பட பல்வேறு ஓட்டுநர்களிடையே மெத்தம்பேட்டமின் மற்றும் கெதும் போதைப்பொருட்களின் பயன்பாடு அதிகரித்து வருவது, சாலைப் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளதாக தேசிய போதைப்பொருள் தடுப்பு முகமை ஏஏடிகே தெரிவித்துள்ளது.
இந்தப் போதைப்பொருட்களை பயன்படுத்தினால் நீண்ட நேரம் சோர்வின்றி வேலை செய்யவும், உடல் சக்தியைத் தக்கவைத்துக்கொள்ளவும் முடியும் என்ற தவறான நம்பிக்கையே இந்தப் பழக்கத்திற்கு முக்கிய காரணமாக இருப்பதாக ஏஏடிகே தலைமை இயக்குநர் ருஸ்லின் ஜுசோ தெரிவித்தார்.
நேற்று நாடு முழுவதும் வணிக வாகன ஓட்டுநர்களை இலக்காகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட ஒருங்கிணைந்த போதைப்பொருள் தடுப்பு சோதனை நடவடிக்கையில், 21 முதல் 61 வயதுக்குட்பட்ட 22 ஓட்டுநர்கள் மெத்தம்பேட்டமின், கெதும் மற்றும் கஞ்சா பயன்படுத்தியிருந்தது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம், போதைப்பொருள் பயன்பாடு காரணமாக சாலை விபத்துகள் அதிகரிக்கும் அபாயம் இருப்பதை மீண்டும் ஒருமுறை வெளிப்படுத்தியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.








