வரும் ஜனவரி 25 ஆம் தேதி கொண்டாடப்படவிருக்கும் பினாங்கு, தண்ணீர் மலை, நாட்டுக்கோட்டை செட்டியார்களின் ஸ்ரீ தண்டாயுதப்பாணி கோயில் தைப்பூச விழாவை முன்னிட்டு நாட்டுக்கோட்டை செட்டியார்கள் ஆலய நிர்வாகத்தினர் பினாங்கு இந்து அறப்பணி வாரியம் மற்றும் தண்ணீர்மலை ஸ்ரீ பாலதெண்டாதப்பாணி ஆலயப் பொறுப்பாளர்களுக்கு தைப்பூச விழா பத்திரிகையை வழங்கி அழைப்பு விடுத்துள்ளனர்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை தண்ணீர்மலை ஸ்ரீ பாலதண்டாயுதபாணி தேவஸ்தான ஆலயத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் நாட்டுக்கோட்டை செட்டியார்கள் கோயில் நிர்வாகம் சார்பில் அறங்காவலர்களான எல். மெய்யப்பன் லக்ஷமணன் மற்றும் வீரப்பன் சொக்கலிங்கம் வழங்கிய தைப்பூச விழா பத்திரிகையை இந்து அறப்பணி வாரியம் சார்பில் அதன் தலைவர் ஆர்எஸ்என் ராயர், ஆணையர் J. தினகரன், ஆலயத் தலைவர் லெ.நரேஷ்குமார் மற்றும் இதர பொறுப்பாளர்கள் பெற்றுக்கொண்டனர்.
இதுநாள் வரையில் இரு தரப்பினருக்கும் இடையில் நிலவி வந்த பிரச்னையால் தைப்பூச விழாவிற்கு அழைப்பு கொடுக்கும் இந்த நீடித்த பாரம்பரிய நின்று விட்ட நிலையில், பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் தலைவராக ஆர்எஸ்என் ராயர் பொறுப்பேற்றப் பின்னர் பினாங்கு தைப்பூச விழாவில் நீடித்த பாரம்பரியத்தை கொண்டுள்ள நாட்டுக்கோட்டை செட்டியார்கள் கோயில் நிர்வாகத்துடன் ஒற்றுமையை வலுப்படுத்த நட்பு பாராட்டி வருகிறார்.
அதன் அடிப்படையில் தைப்பூச விழாயையொட்டி ராயர் தலைமையில் இந்து அறப்பணி வாரிய ஆணையர்கள் கடந்த வாரம் தைப்பூச திருவிழா பத்திரிகையை நாட்டுக்கோட்டை செட்டியார்கள் கோயில் நிர்வாகத்திற்கு வழங்கி முதல் மரியாதை செலுத்தியதைத் தொடர்ந்து நாட்டுக்கோட்டை செட்டியார்களும் தங்கள் ஆலயத்தின் தைப்பூச விழா பத்திரிகையை மரியாதை நிமித்தமாக வழங்கியுள்ளனர்.
பினாங்கு இந்து அறப்பணி வாரியத்திற்கும், நாட்டுக்கோட்டை செட்டியார்கள் கோயில் நிர்வாகத்திற்கும் மீண்டும் பரஸ்பர உறவு மலர்ந்துள்ளதையே அவர்களின் இந்த வருகை காட்டுறது என்று குறிப்பிட்ட ராயர், “ எங்களின் தங்க இரதம், உங்கள் இரதம், “ உங்களின் வெள்ளி இரதம், எங்கள் இரதம்” என நட்பு பாராட்டி, ஒற்றுமையுணர்வுடன் தைப்பூச விழாவை கொண்டாடுவோம் என்றார். ..








