பினாங்கில் கதிரியக்கமற்ற அரியவகை கனிமங்களை ஆய்வு செய்வதிலோ அல்லது அகழ்ந்தெடுப்பதிலோ மாநில அரசு அவசரம் காட்டாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சுற்றுப்புறச் சூழல் மற்றும் தொழில்நுட்பக் மதிப்பீடுகள் நிறைவடையும் வரை, சுற்றுச்சூழல் உணர்திறன் வாய்ந்த பகுதிகள் தொடர்ந்து பாதுகாக்கப்படும் என்று பினாங்கு மாநில வீடமைப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோஸ்ரீ சுந்தராஜூ சோமு தெரிவித்துள்ளார்.
கனிம மற்றும் புவி அறிவியல் துறையின் ஆரம்பக் கணிப்பின்படி, பினாங்கின் தெலுக் பஹாங், பாலிக் புலாவ், புக்கிட் மெர்தாஜாம் மற்றும் புக்கிட் பஞ்சூர் ஆகிய மலைப் பகுதிகளில் சுமார் 21 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள 1.7 மில்லியன் மெட்ரிக் டன் அரியவகை கனிம வளங்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இருப்பினும், பாதுகாக்கப்பட்ட காடுகள், நீர் பிடிப்புப் பகுதிகள் மற்றும் விவசாய நிலங்கள் சம்பந்தப்பட்ட எந்தவொரு திட்டமும் கடுமையான ஆய்வுக்கு உட்படுத்தப்படும் என்று டத்தோஸ்ரீ சுந்தராஜு குறிப்பிட்டுள்ளார். இதற்காகப் பல்வேறு தொழில்நுட்பக் குழுக்களுடன் இணைந்து சுற்றுச்சூழல் மற்றும் சமூகப் பாதிப்புகள் குறித்த ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன என்று அவர் தெரிவித்துள்ளார்.








