கோலாலம்பூர், நவம்பர்.21-
கடந்த திங்கட்கிழமை மாலையில் சுங்கை கிளாங் ஆற்றின் சலோமா பாலத்தின் கீழ் சக பணியாளர்களுடன் நின்று கொண்டு இருந்த போது, திடீரென்று கரைபுரண்டோடிய வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 34 வயது கட்டுமான மேலாளர் கே. சுரேஸ் உடல் இன்று வெள்ளிக்கிழமை கண்டுபிடிக்கப்பட்டது.
நான்கு நாள் தேடலுக்குப் பிறகு ரவாங்கைச் சேர்ந்த சுரேஸ் உடல் இன்று கண்டுபிடிக்கப்பட்டதை கோலாலம்பூர், டாங் வாங்கி மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி சஸாலி அடாம் உறுதிச் செய்தார்.
இந்தத் தேடல் நடவடிக்கையில் அரச மலேசிய போலீஸ் படையைச் சேர்ந்த 120 வீரர்கள், தீயணைப்பு, மீட்புப்படையைச் சேர்ந்த 60 வீரர்கள் மற்றும் கோலாலம்பூர் மாநகர் மன்றப் பணியாளர்கள், வடிக்கால் நீர்பாசன இலாகா பணியாளர்கள் என சுமார் 200 பேர் ஈடுபட்டதாக ஏசிபி சஸாலி அடாம் குறிப்பிட்டார்.
கடந்த திங்கட்கிழமை மாலை 5.30 மணியளவில் கனத்த மழை பெய்து கொண்டு இருந்த போது, கோலாலம்பூர் கம்போங் பாருவிற்கு அருகில் சுங்கை கிளாங் ஆற்றில் சலோமா பாலத்தின் கீழ் கட்டுமானத் தளத்தில் நின்று கொண்டு இருந்த சுரேஷ் மற்றும் 11 அந்நிய நாட்டவர்களும் ஆற்றில் திடீரென்று உயர்ந்த நீர் மட்டத்தில் சிக்கிக் கொண்டனர்.
தீயணைப்பு, மீட்புப்படை உதவியுடன் 11 அந்நியப் பிரஜைகளும் கயிற்றின் உதவியுடன் காப்பாற்றப்பட்ட வேளையில் தனது வாகனத்தை நகர்த்தும் முயற்சியில் ஈடுபட்டு இருந்த சுரேஷ் நீரில் அடித்துச் செல்லப்பட்டார்.
கடந்த புதன்கிழமை காலையில் சுரேஸின் Four-wheel drive Pajero Mitsubishi வாகனம் ஆற்றில் கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்ட நிலையில், சுரேஸைத் தேடும் நடவடிக்கை இன்று நான்காவது நாளாக மேற்கொள்ளப்பட்டது.








