பினாங்கு, செபராங் ஜெயாவில் நான்கு மாதங்களே ஆன ஆண் குழந்தை மரணமடைந்து தொடர்பில் கைது செய்யப்பட்ட சிறார் பராமரிப்பு மையமொன்றின் இரு பெண் பணியாளர்களின் தடுப்புக் காவல் மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
22 வயதான அவ்விரு பணியாளர்களும் இதற்கு முன் ஒரு வாரத்திற்குத் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். எனினும் மேல் விசாரணைக்கு உதவ அவர்களை மேலும் ஒரு வாரத்திற்குத் தடுப்புக் காவலில் வைக்க காவல் துறை விண்ணப்பித்ததை அடுத்து புக்கிட் மெர்தாஜாம் நீதிமன்ற மாஜிஸ்திரேட் நூருல் ரஷீதா அதற்கு அனுமதி வழங்கினார்.
அச்சம்பவம் கொலையாக வகைப்படுத்தப்பட்டு விசாரிக்கப்பட்டு வருவதாக பினாங்கு காவல் துறை தலைவர் அசிஸி இஸ்மாயில் தெரிவித்தார்.
இம்மாதம் 9 ஆம் தேதி சிறார் பராமரிப்பு மையத்தில் சுயநினைவின்றி கிடந்த அந்த நான்கு மாத ஆண் குழந்தை உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்ட நிலையில் சிகிச்சை பலனளிக்காது இறுதியில் உயிரிழந்தது. தாதியான அக்குழந்தையின் தாயார் அண்மையில்தான் பணிக்குத் திரும்பியதோடு தனது மகனை சிறார் பராமரிப்பு மையத்தில் விடத் தொடங்கியதாகவும் கூறப்படுகிறது.








