கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தின் சுங்கத்துறை அதிகாரிகள், கடந்த ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் மேற்கொண்ட மூன்று வெவ்வேறு சோதனைகளில், சுமார் 3.26 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான போதைப்பொருள் மற்றும் வெளிநாட்டு நாணயங்களைக் கைப்பற்றி கடத்தல் முயற்சியைத் முறியடித்துள்ளனர்.
கடந்த ஜனவரி 29-ஆம் தேதி, டெர்மினல் 1-இன் அனைத்துலக வருகை பகுதியில் 50 வயது மதிக்கத்தக்க தன்சானியா நாட்டைச் சேர்ந்த ஒருவரைச் சுங்கத்துறையினர் மற்றும் எல்லைப் பாதுகாப்புப் படையினர் தடுத்து நிறுத்தினர்.
பாடி பேக்கர் எனும் முறையில் அவர் போதைப்பொருள் கடத்துவதாகச் சந்தேகம் எழுந்ததையடுத்து, அவரது உடல் ஸ்கேன் செய்யப்பட்டது.
அவரது வயிற்றுப் பகுதியில் சந்தேகத்திற்கிடமான பொருட்கள் இருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், அவரது உடலிலிருந்து 101 போதைப்பொருள் கேப்சூல்கள் வெளியே எடுக்கப்பட்டன.
வெளிப்படையான நெகிழி உறைகளால் சுற்றப்பட்டிருந்த அந்த கேப்சூல்களில் சுமார் 1,629.20 கிராம் கோகேன் இருந்தது கண்டறியப்பட்டது.








