கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதியில் இன்று மாலை பெய்த கனமழை மற்றும் இடியுடன் கூடிய காற்றினால் பல இடங்களில் திடீர் வெள்ளம் மற்றும் மரங்கள் முறிந்து விழுந்த சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. இதனால் மாலை நேர நெரிசலில் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது.
குறிப்பாக, NKVE நெடுஞ்சாலையின் சுங்கை பூலோ வெளியேறும் பகுதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால் இரு திசைகளிலும் போக்குவரத்து முடங்கியது. ஷா ஆலாம் செக்சன் 13-லும் வெள்ளம் புகுந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கோலாலம்பூரின் ஜாலான் அம்பாங் மற்றும் ஜாலான் நாகசாரி பகுதிகளில் மரம் விழுந்ததில் சில வாகனங்கள் சேதமடைந்தன. அதேபோல், பிரிமா பத்து காவ்ஸ், செலாயாங் சாலையில் மரம் விழுந்ததில் நான்கு வாகனங்கள் சிக்கின; இருப்பினும் பெரும் பாதிப்புகள் ஏதும் ஏற்படவில்லை என சிலாங்கூர் தீயணைப்புத் துறை உறுதிப்படுத்தியுள்ளது.








