செர்டாங் மருத்துவமனையில் நேற்று காலமான முன்னாள் சுகாதார அமைச்சர் டத்தோ சுவா ஜுய் மெங் -யின் குடும்பத்தினருக்கு பி.கே.ஆர் தலைவரும் பிரதமருமான டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தனது இரங்கலைத் தெரிவித்துக் கொண்டார்.
மசீச.வின் முன்னாள் உதவித் தலைவரும், ஜோகூர் பக்ரி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான 80 வயது சுவா,1995 முதல் 2004 ஆம் வரை ஒன்பது ஆண்டுகள் நாட்டின் நீண்ட கால சுகாதார அமைச்சராக பதவி வகித்தவர் ஆவார். சுவா - சுகாதார அமைச்சராக பணியாற்றிய காலத்தில் அவரின் மகத்தான சேவை காலத்தால் போற்றப்படும் என்று பிரதமர் புகழாஞ்சலி சூட்டினார்.
மசீச.வில் அப்போதைய தேசிய தலைவராக இருந்த ஒங் தீ கீட் தலைமையில் நம்பிக்கை இழந்து விட்டதால் சுவா, அக்கட்சியை விட்டு விலகி, 2009 ஆம் ஆண்டில் பி.கே.ஆர் கட்சியில் தம்மை பிணைத்துக்கொண்டார்.
ஜோகூர் மாநில பிகேஆர் தலைவராக பொறுப்பு வகித்த சுவா, 2013 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் ஜோகூர் சிகமாட் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு, 1,217 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்விக் கண்டார்.








