Aug 1, 2026
Thisaigal NewsYouTube
அரசு நிலங்களை சட்டவிரோத ஆக்கிரமிப்பிலிருந்து பாதுகாக்க வேண்டும்: பகாங் சுல்தான் அதிரடி உத்தரவு
தற்போதைய செய்திகள்

அரசு நிலங்களை சட்டவிரோத ஆக்கிரமிப்பிலிருந்து பாதுகாக்க வேண்டும்: பகாங் சுல்தான் அதிரடி உத்தரவு

Share:

குவாந்தான், ஆகஸ்ட்.01-

பகாங் மாநிலத்தின் ஒவ்வோர் அங்குல நிலமும் சட்டவிரோத ஆக்கிரமிப்புகள் மற்றும் சட்டவிரோதக் குடியேற்றங்களில் இருந்து பாதுகாக்கப்பட வேண்டும் என்று பகாங் சுல்தான், சுல்தான் அப்துல்லா திட்டவட்டமாக வலியுறுத்தியுள்ளார்.

தனது 67-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு இஸ்தானா அப்துல் அஜீஸில் நடைபெற்ற அரசு விருதுகள் வழங்கும் விழாவில் உரையாற்றிய அவர், மாநில நிலத்தையும் அதன் கண்ணியத்தையும் பாதுகாப்பதில் சட்டங்கள் அச்சமோ பட்சபாதமோ இன்றி நிலைநாட்டப்பட வேண்டும் என்றார். சட்டம் ஆளுக்கொரு நீதியாக அமல்படுத்தப்பட்டால் நீதி தன் அர்த்தத்தை இழந்து விடும் என்றும் சுல்தான் எச்சரித்தார்.

சமூக ஊடகங்களில் பரப்பப்படும் தவறான தகவல்களை மக்கள் எளிதில் நம்ப வேண்டாம் என்று கேட்டுக் கொண்ட சுல்தான், மக்களின் நலனுக்காகப் போராடுவதாகக் கூறிக் கொண்டு சட்டவிரோத ஆக்கிரமிப்புகளை ஊக்குவிப்பவர்கள் மீதும், அதற்குத் துணை போகும் அரசியல் மற்றும் அதிகாரத் தரப்பினர் மீதும் சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என உத்தரவிட்டார்.

பகாங் மாநிலத்தின் 44 விழுக்காடு நிலப்பரப்பு வனப் பகுதியாகப் பாதுகாக்கப்பட்டு வருவதைக் குறிப்பிட்ட அவர், இதற்காக மத்திய அரசு பகாங் மாநிலத்திற்குப் போதிய நிதி ஒதுக்கீடுகளை வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

Related News