கடந்த ஜூன் 12-ஆம் தேதி ஷா ஆலாமில் உள்ள பள்ளிவாசல் ஒன்றின் கால்பந்து மைதானத்தில் இரண்டு பள்ளி மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட மோதல் சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
இது குறித்து ஷா ஆலம் மாவட்ட போலீஸ் தலைவர் சாருதின் சாமா கூறுகையில், இந்த மோதல் சம்பவத்தில் ஈடுபட்ட மாணவர்களில் ஒருவரின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில், விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.
மதியம் 1 மணியளவில் நடந்த இந்த சம்பவத்தில், 13 மற்றும் 14 வயதுடைய இரு மாணவர்கள் ஈடுபட்டிருந்ததுடன், அவர்கள் ஒருவருக்கொருவர் அறிமுகமானவர்களாகவும், ஒரே பள்ளியில் பயிலும் மாணவர்களாகவும் இருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இச்சம்பவத்தில் 13 வயது மாணவர் காயங்களுக்கு உள்ளாகி தற்போது ஷா ஆலம் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருவதாகவும் சாருதின் சாமா குறிப்பிட்டுள்ளார்.
இந்த சம்பவத்தின் உண்மையான காரணம் மற்றும் பின்னணி குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.








