நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தல் அமைதியாகவும், சீராகவும் நடைபெறுவதை உறுதி செய்ய, மொத்தம் 5,953 போலீஸ் மற்றும் அதனுடன் தொடர்புடைய பிற துறைகளைச் சேர்ந்த பணியாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
இது குறித்து மாநில போலீஸ் தலைவர் டத்தோ அல்சாஃப்னி அகமட் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த எண்ணிக்கையில் 4,845 மூத்த போலீஸ் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
மீதமுள்ளோர், மக்கள் தன்னார்வப் படையான ரிலா மற்றும் போலீஸ் தன்னார்வப் படையைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல் காலம் முழுவதும் ஏற்படக்கூடிய எந்தச் சூழ்நிலையையும் எதிர்கொள்ளும் வகையில், தொடக்கத்திலிருந்தே பல்வேறு விரிவான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதில் பாதுகாப்பு ஏற்பாடுகள், போக்குவரத்து கட்டுப்பாடு, தேர்தல் பிரசார நடவடிக்கைகள் கண்காணிப்பு, சட்ட அமலாக்கம் மற்றும் அவசரநிலைத் தயார்நிலை ஆகியவை அடங்கும் என்று இன்று திங்கட்கிழமை அல்சாஃப்னி அகமட் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.








